19/3/18

என்ன செய்யப் போகிறது மத்திய அரசு ?






இந்திய வங்கித்துறை இப்போது ஒரு மிக முக்கிய திருப்பு முனையை சந்திக்க காத்திருக்கிறது. நாட்டின் பெரிய வங்கிகள் நாட்டுடமையாக்க பட்டதிலிருந்து பொருளாதாரமும் தொழிற்துறையும் பெருமளவில் வளர்ந்திருப்பது உண்மைதான் என்றாலும், அதன் கூடவே மெல்ல வளர்ந்து இன்று பூதாகாரமாக நிற்பது வாராக்கடன் பிரச்னை.

 2008 செப்டம்பரில் மொத்த கடன் பாக்கி ரூ.11,271 கோடி. இது 2009ல் சற்று சரிந்தது. அதன்பிறகு மெல்ல மெல்ல வளரத்தொடங்கியது. 2013ல் ரூ.28,417 கோடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.1.1 லட்சம் கோடியை தாண்டி விட்டது. மொத்த கடன் பாக்கி ரூ.1,11,739 கோடி. இதில் 9,339   மோசடி. கணக்குகளின் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு வரவேண்டியது ரூ.65,642 கோடி (மொத்த கடனில் 58%)  மீதி, வேண்டுமென்றே கடன் செலுத்தாதவர்கள். (Will full defaulters)  என வங்கிகளால்  வரையறை செய்யப்பட்டவர்கள். அதாவது, பணத்தை திருப்பி செலுத்த வேண்டிய திறன், வசதி இருந்தும், வாங்கிய கடனை கட்டக்கூடாது என்ற நோக்கத்துடன் வேண்டுமென்றே மோசடி செய்தவர்கள்.

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளில் கடன் வாங்கிய கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளார். இங்கிலாந்தில் பதுங்கியுள்ள இவரை மீட்க படாத பாடுபடுகிறது மத்திய அரசு. இவருடைய சொத்துக்களை விற்று கடனை மீட்பதும் பகீரத பிரயத்தனமாக உள்ளது. இதுபோல், வின்சன் டயமன்ட் ஜூவல்லரி அதிபர் ஜாட்டின் மேத்தா பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.5,500 கோடி பாக்கி இருக்கிறது. இவர்களை தொடர்ந்து ரெய் அக்ரோ லிமிடெட் ரூ.2,730 கோடி, மெஹூவா நிறுவனம் ரூ.2,416 கோடி, ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.2,371 கோடி, ரெய்ட் அண்ட் டெய்லர் எஸ்குமார்ஸ் நேஷன் ஒய்டு லிமிடெட் ரூ.2,080 கோடி என பட்டியல் வராக்கடன்கள் பட்டியல்நீள்கிறது. இவர்களில் பலர் , கடனுக்கு ஈடாக காண்பித்த சொத்துக்களை வங்கிக்கு அறிவிக்காமலேயே மறைமுகமாக விற்றுவிட்டவர்கள் பலர்.  இன்று ரூ.250 கோடிக்கும் மேல் கடன் பாக்கி வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தரவேண்டிய நிலுவை மட்டும் ரூ.48,000 கோடி என்று அரசு அறிவித்திருக்கிறது . 


 அண்மையில் வைர வியாபாரி  நீரவ் மோடியின் 11000 கோடி மோசடி வெளியானதைத் தொடர்ந்து தினமும் ஒரு நிறுவனத்தின் பெயர் கோடிகளுடன் தலைப்புச்செய்தியாக வருகிறது.

. கடந்த ஓராண்டில் மட்டும் வராக்கடன் அளவு சுமார் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது முறையே 3 சதவீதம், 67 சதவீதம் மற்றும் 35 சதவீதம் என வளர்ந்து வந்துள்ளது. கடந்த 2013ம்  ஆண்டு செப்டம்பரில் ரூ.28,417 கோடியாக இருந்த வராக்கடன்கள் கடந்த  ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி ரூ.1.1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்து விட்டது. 
வராக்கடன் பிரச்னையால் சிக்கலில் உள்ள வங்கிகளின் நிதி நிலையை சீராக்கவும், அவற்றை மீட்டெடுக்கவும் மூலதன நிதியாக மத்திய அரசு வழங்குகிறது. 2018-19 நிதியாண்டுக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.52,800 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.ஆனால் வாரக்கடன்கள் வளரும் வேகத்துக்கு இது போதுமானதாகயில்லை.

மோசடிகளினாலும்,  வேண்டுமென்றே வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தாவர்களின்  கடன்களை மக்கள் வரிப்பணத்திலிருந்து  தொடர்ந்து சமாளிப்பது என்பது மோசமான பொருளாதாரநிலைக்கு வழிவகுக்கும்.











ரமணன்   

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்