15/10/17

ஆச்சாரியன் நிர்வகித்த அரங்னின் ஆலயம்


இருள் பிரிந்து பொழுது புலர்ந்து, மெல்லிய வெளிச்சம். பரவிக்கொண்டிருக்கிறது. முதல் நாள் பெய்த மழையினால் வீசும் குளிர்ந்த காற்றும் இதமாக இருக்கிறது. ஶ்ரீரங்கத்தின் அமைதியான அந்த வீதியில் கம்பிரமான ராஜ கோபுரத்தின்*1 நுழை வாயிலைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறோம். தெற்கு உத்தரவீதியில் பளிச்சென்ற விளக்கில் மின்னும் ஶ்ரீ ரெங்கா என்று மூன்று முறை எழுதபட்டிருக்கும் வார்த்தைகளை நம்மையறியமலே படிக்கும்போதே அரங்கனின் திருநாமத்தைச் சொல்லித்தான் அந்தச் சிறிய கோபுர வாயில்*2 நுழைய வேண்டும் என்ற நியமத்தைச் செய்கிறோம். அரங்கனின். விஸ்வரூப தரிசனம் காணச்சென்று கொண்டிருக்கிறோம்
6மணி. தரிசனத்தை தவறவிட்டுவிடக் கூடாது என்ற அவசரத்தில் ரெங்க விலாச மண்டபத்தைக் கடந்து செல்லும்போது பிரமாண்டமாக நிற்கும் கருடாழ்வருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு சந்நதி மண்டபத்தை அடைகிறோம். தங்ககவசமிடப்படிருக்கும் நுழைவாயிலின் வெள்ளிக்கதவுகள் திறந்திருக்கிறது ஆனால் ஒரு பட்டுத் திரையால் சன்னதி மூடப்பட்டிருக்கிறது.
அந்த நுழை வாயிலுக்கு எதிரே மேனியில் பளிச்சிடும் திருமண்களுடன் ஒருவர் வீணை வாசித்துக்கொண்டே மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருக்கிறார். அருகில் உட்காரந்த பின்னர்தான் அது அரங்கனுக்கான, தொண்டரடிப்பொடிஆழ்வார்அருளிய திருப்பள்ளியெழுச்சியெனப் புரிகிறது. இனியமையான குரல் வீணையெழுப்பும் நாதத்துடன் இழைந்து கேட்கிறது. திருப்பள்ளியெழுச்சி முடிந்தபின்னரும் காலைநேர ராகமான பூபாளத்தில் வேறுசில பாடல்களும் பாடுகிறார். அருகில்நிற்கும் மற்ற விரல்களை மடக்கி ஆள்காட்டி விரலை மட்டும் உயர்த்தி நிற்கும் பிரம்மாண்டமான விஜயன், ஜெயன் வெண்கல சிலைகளையும் அவற்றிக்கு பட்டு உடுத்தியிருக்கும் நேர்த்தியையும் பாடல்களையும் ரசித்துக்கொண்டிருக்கிறோம். வந்திருக்கும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் கோவில் ஊழியர் உரத்தகுரலில் கட்டளையிட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசியல்வாதி என்ற அடையாளங்களைச்சொல்லும் உடையில் வந்த ஒருவரும் அவரது குடுமபத்தினரும் வீணை வாசிப்பவருக்கு மிக அருகிலேய அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு இடையூறுகளுக்கும் இடையே அந்த மனிதர் ஆத்மார்த்தமாக வீணைவாசித்த வண்ணம் பாடிக்கொண்டே இருப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறோம்.
திடுமென நகரா ஓசை கேட்கிறது. அந்த இடத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.வாத்தியங்கள் முழங்கப்பவனியாகவந்த சிவிகையென அழைக்கபடும் பல்லக்கு நுழைகிறது. சிவப்பு தலைப்பாகை அணிந்து வெள்ளித்தடியேந்திய ஒருவர் கட்டியம் கூறிக்கொண்டே வருகிறார். பல்லக்கின் உள்ளே சிறிய உருவில் அரங்கன். இரவு தயார் சன்னதிக்கு சென்றவர் அவரிடத்துக்கு திரும்புகிறார் என்கிறார்கள். சில நிமிடங்களில் மீண்டும் வாத்திய முழக்கம். யானை, காரம்பசு, வெள்ளைக்குதிரை*2a பவனியாக வந்து கொண்டிருக்கிறது. முதலில் யானை படிகள் ஏறி நாம் அமர்ந்திருக்கும் மண்டபத்திற்குள் வருகிறது. அந்தப் படிகள் மிக அகலமாக இருப்பதின் காரணம் புரிகிறது. பின்னர் பசு. தொடர்ந்து குதிரை வருகிறது. யானை ஆண்டாள் மூலஸ்தானத்தை நோக்கியும், பசு பின்புறம் திரும்பியும் தயாராக நிற்கிறது. அருகில் வெண்குதிரை. ராமானுஜன். நிற்கிறார்கள். அரங்கன் கண்முழிக்கும்போது முதன் முதலில் இந்த மங்களங்களில் தான் முழிக்கப்போகிறார். மணியோசனையுடன் திரைவிலகும்போது யானை மூன்று முறை பிளறுகிறது. “ரெங்கா” எனச்சொல்லுவது போலக் கேட்கிறது. மீண்டும் திரையிடுகிறார்கள். வாத்திய முழக்கங்களுடன் யானை ஆண்டாளும், அவரது நண்பர்களும் திரும்பியபின் திரை திறக்கப்பட்டு நாம் அனுமதிக்கப்படுகிறோம்.
கர்ப்பகிரஹத்தில் அனந்த சயனத்தில் அரங்கன். அவர் முன்னே நல்ல உயரத்தில் உற்சவர். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் தைலக்காப்பு என்ற நடைமுறையினால் அரங்கனின் மேனி முழுவதும் காப்பிடபப்ட்டிருப்பதால் முகத்தை மட்டுமே அன்று தரிசிக்க முடிந்தது. எப்போதும் சர்வ அலங்கார ஆபரணங்களுடன் இருக்கும் உற்சவர் மிகச் சிம்பிளாகப் பளிரென்று இருந்ததால், சங்கு சக்கரம் ஏந்திய நான்கு கைகளையும் பார்க்க முடிகிறது. இந்த ஒரு சமயத்தில் மட்டும் தான் இந்தக் காட்சி கிடைக்கும் என்றார்கள். இந்த விஸ்வரூப தரிசனம் குறைவான நேரம் என்பதால் குறைந்தஅளவுஎண்ணிகையிலேயேபக்தர்கள்அனுமதிக்கபடுகிறார்கள்.
அவர்கள்தரிசித்தபின்னர்அரங்கனின் ஆராதனைகளுக்காகச்சன்னதி மூடப்படுகிறது. நாம்தயாரை தரிசிக்க வெளியேறுகிறோம்
.
அந்தக் காலைநேரத்தில் பளிசென்ற மஞ்சள் பட்டாடையில் வெறும் மல்லிகை மாலைகள் மட்டுமணிந்து அதிக ஆபரணங்கள் இல்லாமலேயே ஜொலித்துக்கொண்டிருந்தார் தாயார். இங்கு மூலவராக இரண்டு தயார்கள். ஆதியில் பிரதிஷட்டை செய்யபட்ட உருவத்தை அன்னியர் படையெடுப்பிலிருந்து காப்பாற்ற வேறு இடத்தில் பத்திரப்படுத்தபட்டிருக்கிறது. மீண்டும் கோவிலை நிர்மாணிக்கும்போது அது கிடைக்காதால், புதிதாக ஒன்று நிறுவபட்டிருக்கிறது. பின்னாளில் ஆதி உருவம் கிடைத்தவுடன் அதையும் இதே சன்னதியில் நிறுவிப் பூஜிக்கிறார்கள். அதனால் இரண்டு மூலவர்கள்.
தயாரை தரிசித்து வெளிய வரும்போது எதிரே கவிச்சக்ரவர்த்தி கம்பன், பார் போற்றும் தன் காவியத்தை அரேங்கிற்றிய மண்டபம். அரங்கனின் சன்னதியில் வீணை வாசித்தவரை அங்குச் சந்திக்கிறோம். “திருப்பள்ளியெழுச்சி பாடுவது என்பது ராமனுஜர் ஏற்படுத்திய வழிபாடு முறை. பரம்பரையாக எங்கள் குடும்பம செய்துவரும் பணி இது. நான் 45 வது பரம்பரை” என்கிறார் திரு சீனிவாசன்*2c இவர் ஒரு ஆடிட்டர். இது தெய்வகட்டளையாகத் தன் குடும்பத்தினர் மட்டுமே செய்யக்கூடிய பணி என்பதில் பெருமையடையும் இவரது தந்தை வீணை ரெங்கராஜனுடனும் தன் மகன்களுடனும் ஒரே நேரத்தில் சன்னதியில் வாசிக்கக் கிடைத்த வாய்ப்பை வாழ்க்கையில் பெற்ற பெரும் பாக்கியமாகக்கருதுகிறார்
. திருப்பள்ளியெழுச்சியைத்தொடர்ந்து நீங்கள் பாடிய பாட்டுக்களை நீங்களே தேர்ந்தெடுப்பீர்களா? என்ற நாம் கேட்டபோது, “திருப்பள்ளியெழுச்சிபாட என்ன பாடல்? அதற்கு என்ன ராகம்? என்பதை நாதமுனிகள் வகைப்படுத்தியிருக்கிறார். அதை மாற்றமுடியாது- கூடாது. மற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாடும் உரிமை எங்களுக்கு உண்டு. மழை பொய்த்துவிட்டதால், அமிர்தவர்ஷ்ணி ராகப் பாடல் இன்று பாடினேன் என்கிறார்.

அலகில்லா விளையாட்டுடையார் அவர் என்று சொன்ன கம்பனின் பாதம் பட்ட அந்த மண்டபத்தில் அமர்ந்து ஆயிரம் ஆண்டுகளாகத்தொடர்ந்து பாடப்பெற்றுவரும் பாடலைப்பாடும் பரம்பரையின் இந்தத் தலைமுறையைச் சந்திக்க நமக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.

ஆலயத்தின்பிரகாரங்களைச்சுற்றி வரலாமெனப்புறப்படுகிறோம். இந்தக் கோவில் மிகப்பெரிது.156 ஏக்கர் பரப்பில் செவ்வக வடிவில் அமைந்த இதில் 7 பிரகாரங்கள். ஒவ்வொன்றிலும் சில சன்னதிகள் மொத்தம் 54 சன்னதிகள் இருக்கின்றன. அனைத்தையும் ஒரு நாளில் தரிசனம் செய்ய முடியாது. இயன்றவற்றை பார்க்கலாமென வலது புறமிருக்கும் சக்கரத்தாழ்வார்சன்னதியிலிருந்து துவங்கலாமென நடக்கத் துவங்குகிறோம்.
போகும் வழியில் நம்மை நிறுத்துவது அருகிலிருக்கும் 5 பிரமாண்டமான தானியகளஞ்சியங்கள்*3ஆலயத்துநிலங்களில்விளையும்தானியங்களையும், காணிக்கையாகச்செலுத்தபடும் தானியங்களையும் சேமிக்கஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கபட்டிருந்த*2b இவற்றை இப்போது புதுபித்திருக்கிறார்கள்*3
. 20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட இந்தக் கிடங்குகளில் மூன்று தளங்கள் மரப்பலகைகளால் அமைக்கபட்டிருக்கின்றன. மொத்தமாக 1500 டன் தானியங்களைச் சேமிக்க முடியும் என்பதைக்கேட்டு ஆச்சரியப்படும் நாம் கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் இல்லாதாதால் இப்போது காலியாகதான் இருக்கிறது என்பதைக் கேட்டு வருந்துகிறோம். தானியங்களை நீண்ட நாள் சேமிப்பது என்பது மிகப்பெரிய சவால்.தட்பவெப்ப நிலைமாற்றங்களால் அவை வீணாகும் வாய்ப்பு அதிகம். அதனால் பசுஞ்சாணி, வைக்கோல்.கருப்பட்டி, பதனீர் பதப்பட்ட களிமண், ஒருவகை இலை போன்றவற்றை கலந்து அரைத்த கலவையால் இதன் சுவர்களை உருவாக்கியிருக்கிறான் அன்றை தமிழன். . அந்தக் கலவையின் ரகசியங்களைக் கண்டுபிடித்து அதை இயந்திரங்களின் மூலம் தயாரித்து சிதைந்து கிடந்த இந்தக் களஞ்சியங்களை இப்போது புதுபித்திருக்கிறார்கள். எல்லாம் இந்த ஆலய நிர்வாக அதிகாரியின் ஆர்வத்தினாலதான் என்கிறார் இதன் பொருப்பாளார்.
அந்த நீண்ட பிரகாரத்தின் மறுமுனையில் 1000 கால் மண்டபத்தை அடையும்போது ஏதோ மாறுதலை உணர்கிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாம் இந்த இடத்தை இப்படி பார்த்த ஞாபகம் இல்லையே? என்ற எண்ணம் தாக்குகிறது. காரணம் அந்த அழகான யானையின் சிற்பம்.*3a/4 வாலை முறுக்கி உயர்த்திக்கொண்டு மிக வேகமாக ஒடும் அதன் பின்னே அதை விரட்டும் பாகன். 12 அடி உயரமிருக்கும்.*3ato4b
“நீங்கள் மட்டுமில்லை. நான் இந்த ஊரிலேயே பிறந்து 40 ஆண்டுகளாக வாழ்ந்தவன். நானே இதைக் கடந்த சில மாதங்களாகத்தான் பார்க்கிறேன். இந்த யானையின் உயரத்துக்கு 12 அடிக்கு மண்மேடிட்டு அதனுள் புதைந்து போயிருந்திருக்கிறது. அந்த மேட்டில் புதர் மண்டிக்கிடந்ததால் யாரும் வரக்கூடமாட்டார்கள். அதனால் இப்படியொரு சிலை இருப்பதே யாருக்கும் தெரியாது. நல்ல வேளையாக இப்போது இருக்கும் நிர்வாகம் கண்டுபிடித்துச் செம்மைப்படுத்தியிருக்கிறார்கள்” என்றார் திரு ராமன்.*4a
வினோமான பச்சைவண்ணஜாடமுடி ஹேர்ஸ்டைலுடன் அருகிலிருந்த இருந்தஒருஜெர்மானியப்பெண்ணும்*6நமக்குச்சொல்லபட்ட விபரங்களைக்கேட்டு ஆச்சரியபட்டு போனார். ஒரு டிவி சானலில் பணிபுரியும் லில்லியும் அவரது அம்மா இல்காவும் கோவில்களைப்பார்க்க இந்தியா வந்திருக்கிறார்களாம்.*5&7 இத்தனை நாள் மண்ணில் புதைந்திருந்த அந்த மண்டபத்தின் பக்க சுவர் மலர்ந்த தாமரை இதழ்களின் மேல் நிற்பது போல அமைக்கபட்டிருக்கிறது அதன் மீது அழகிய சிற்பங்கள்.

அதைக்கடந்து வந்ததும் நம்மை நிறுத்துகிறது வெள்ளை வண்ணத்தில் நிற்கும் ஒரு பிரமாண்டமான கோபுரம். இதற்கு இனிமேல் வர்ணம் பூசு வார்களா? எனக் கேட்ட நமக்கு “இல்லை இது தான் பல ஆண்டுகளாக அதன் வண்ணம்” என்று சொன்னார் தினசரி இரு முறை இந்தக் கோவிலுக்கு வரும் திரு. ரெங்கராஜன்.7a திருச்சி BHELலிலிருந்து ஒய்வு பெற்ற இந்த அதிகாரி கோவிலின் அத்தனை விபரங்களையும் விரல்நுனியில வைத்திருக்கிறார். “இந்தக் கோபுரம் ஒரு தியாகத்தின் சின்னம். மூஸ்லீம் மன்னர்கள் படையெடுத்து இந்தக் கோவிலைச் சூறாடியபோது கோவிலின் நகைகளை ரகசியமாகப் பாதுகாத்த அமுதனார் என்பவரை அவை இருக்குமிடம் கேட்டுச்சித்தரவதை செய்துகொண்டிருந்தான் படைத்தளபதி. தளபதியின் கவனத்தை தன் அழகால் திருப்பிய ஒரு தேவதாசி தனக்கு நகைகள் இருக்குமிடம் தெரியும் எனச்சொல்லி இந்தக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துசென்று அங்கிருந்து அவனைத் தள்ளிவிட்டுவிட்டு தானும் குதித்து இறந்துவிட்டார். அவர் பெயர் வெள்ளையம்மாள். அவர் நினைவாக இந்தக் கோபுரத்துக்கு வெள்ளை தவிர வேறு வண்ணம் பூசுவதில்லை”. என்றார். அரங்கனின் நகைகளைக் காத்த அந்த ஆடலழகிக்கு ஒரு கோபுரத்தையே நினைவுச்சின்னமாக்கியிருக்கிறார்கள். என்று எண்ணிக்கொள்கிறோம்.
“இதைக் கவனித்தீர்களா? என அருகிலிருக்கும் சேஷ ராய மண்டப சிலைகளைக் காட்டுகிறார் திரு. ரெங்கராஜன்*7a. வரிசையாக நிற்கும் எட்டுத்தூண்கள். ஒவ்வொன்றும் ஒரே கல்லில் வடிக்கபட்டவை. முன்னெங்கால்களைத்தூக்கிப் பாயும் குதிரைகள்மீது போர்வீரர்கள். தங்களை தாக்க வரும் மிருகங்களுடனும் மனிதர்களுடன் போரிடும் காட்சிகள். குதிரைமீதிருக்கும் சேணத்தின் மெல்லிய சங்கிலியிலிருந்து, பாய்ந்த வேல் மிருகத்தின் வயிற்றை கிழித்து வெளியே வரும் வரை நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.*9to13 நாளெல்லாம் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம். அத்தனை தத்ரூபம். பொதுவாகக் கோபுரங்களின் அருகில் இப்படி பெரிய மண்டபங்கள் காணப்படுவதில்லையே- இங்கு எப்படி? எனக் கேட்கும் நமக்கு “இது கிருஷ்ண தேவராயர் பரம்பரையில் வந்த சேஷராயர் ராஜகோபுரத்தின் முதல் நிலையாக அமைக்க வடித்திருக்கிறார்கள். பிரித்துக் கோபுரத்தின் மீது நிறுத்துமுன் சரிபார்த்த அசெம்பளி மாடல் இது. மொட்டைக்கோபுர முதல் மாடத்தின் அளவுகளும் இதன் அடிப்பகுதி அளவுகளும் கச்சிதமாகப் பொருந்துகின்றன. தொடர்ந்த போர்களினால் கோபுரம் மொட்டைக்கோபுரமாக நின்றதைப் போல இது இங்கேயிருந்துவிட்டது “என்கிறார் அவர்
.
அடுத்து நாம் நிற்பது திராவிட தமிழ் வேதமான திவ்ய பிரபந்தத்தை, மக்களின் மனதில் ஆழ பதியச் செய்து, மதத்தில் பல புரட்சிகளைச் செய்த, ராமானுஜரின் சன்னதியில்.*13ato16. ராமனுஜர் என்பது ஒரு பெயர்மட்டுமில்லை. அந்தசொல்லே இரு இயக்கம் என்று சொல்லுமளவுக்கு வைணவத்தை வளர்த்த ராமனுஜருக்கும் இந்தக்கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உருவாக்கியவர். கோயிலொழுகு என்று அவர் வாய்மொழியாகச் சொன்னவை, சுவடிகளில் பதியபட்டு இன்று புத்தகங்களாகவே வெளியாகியிருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படிதான் அனைத்து வைஷணவ கோவில்களும் இயங்குகின்றன
.
“பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களைத் திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இதிலிருப்பது அவரது உடல் என நம்பப்படுகிறது.அதனால் தினசரி அபிஷேகங்கள் கிடையாது ஆண்டுக்கு ஒரு முறை பச்சைகற்புரம் குங்கமப்பூ அரைத்த கலவை பூசப்படுகிறது. அந்தச் சமயத்தில் அதைசெய்துகொடுக்க இங்கு பக்தரகள் வந்து உதவுவார்கள் என்று சொல்லும் பூஜா பரிசாகர் அரவிந்தன்*14 அதற்கான அம்மிகள் இருக்கும் அறையைக் காட்டுகிறர்.*15,15a இவர் அரங்கனின் பல்லக்கை சுமக்கும் தனிஉரிமைபெற்ற ஶ்ரீபாதம் தாங்கிகள் என்ற 16 குடும்பங்களின் ஒன்றின் பரம்பரையில் வந்தவர். *14 சன்னதியை சுற்றியிருக்கும் சிறிய பிரகாரத்தில் இராமனுஜரின் வாழ்க்கை கதையைச் சொல்லும் 108 தஞ்சாவூர் படங்கள். ஒவ்வொன்றும் பேசுகிறது. அருகில் புதர்மண்டிக்கிடந்த இடம் இன்று நந்தவனமாக மாறியிருக்கிறது.
அரங்கனின் ஆலயத்தைக் காத்த ஆச்சாரியனின் சன்னதிக்கு*16 அவரது 1000மாவது ஆண்டில் வந்ததை எண்ணி மகிழ்கிறோம். “பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே சமூக நீதிகாத்த அந்த வேதாந்தி தமிழுக்கு காட்டிய மரியாதை மிக அதிகம். சன்னதியில் ஆராதனை முடிந்தவுடன் நாங்கள் மணிஅடித்தவுடன் வெளியே சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் வேதகோஷங்கள் நிறுத்தப்பட்டுவிடும். ஆனால் தமிழில் பிரபந்தம் சொல்லபட்டால் நிறுத்தப்படாது அது முடியும் வரை சன்னதி திறக்கப்படாது இந்த முறையைக் கொண்டுவந்தவர் இராமானுஜர். கோவில் பணிகளைப் பிரித்துப் பலருக்கு பகுந்தளித்ததைபோலக் கெளரவங்களை தரவும் ஒழுங்கு செய்திருக்கிறார். விழாநாட்களில் அர்ச்சகரான எனக்குப் பரிவட்டம் கட்டி கோவில் மரியாதைசெய்வதைப் போல மேளவாத்திய கலைஞரும் ஒரு நாள் கெளரவிக்கப்படுவார். இது மட்டுமில்லை நிர்வாகத்தில் இன்று கடைப்பிடிக்கும் பல விஷயங்களை அவர் அன்றே நிர்ணயத்திருக்கிறார். உதாரணமாகக் கோபுரத்தின் மீது தீப்பந்தம் வைத்துத் திரும்பும் தொழிலாளிக்குத்தான் அர்ச்சகர் முதல் சடாரி சாத்துவார். இது அந்தத் தொழிலாளி பத்திரமாகத் திரும்பியதை உறுதிசெய்து கொள்வதற்கும் தான் என்கிறார் சுந்தர் பட்டர்.*17a

நாம் சந்தித்த பலரும் பாராட்டிப் பேசும், கோவிலின் நிர்வாக அதிகாரியைச் சந்திக்க விரும்புகிறோம். உண்டியலிகளிலிருந்து கொட்டும் பணமழையை பிரித்துக் கணக்கிடுவதில் ஈடுபட்டிருக்கும் சமுக சேவர்களின் பணியின்*17 மேற்பார்வையில் இருந்த அவர் “இது முடிந்தபின் பேசுவோமே?” என்கிறார். கோவிலின் இணை ஆணையர் திரு பொன் ஜெயராமன்
.
கோவிலின் நுழைவாயில் எளிதாகத் திறக்கக் கூடிய நவீன அமைப்பில் தசாவதார சிற்பங்களுடனிருக்கும் புது மெருகு கலையாத பிரமாண்டமான தேக்கு கதவுகளைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறோம். எண்ணங்கள் சிறகடிக்கின்றன.*18
இந்தக் கோவில்தான் எத்தனை சரித்திர சம்பவங்களுக்குச் சான்றாக நின்றிருக்கிறது-? சோழ, பாண்டிய சாளுக்கிய, நாயக்க என்று எத்தனை அரசு குலங்களையும் படையெடுப்புகளையும், வாரிசு சண்டைகளையும் போர்களையும் கொள்ளைகளையும் சந்தித்திருக்கிறது? அரங்கனை காப்பாற்ற எடுத்தச்சென்ற பயணத்தின் அஞ்சாத வாசத்திற்குபின் அவரது மீள் குடியேற்றமும், கோயிலொழுகு-, கம்பனின் காவியம், அருணாசலகவியின் ராமநாடகம் பிறந்த இடம் - எனக் காலப்பெட்டகமாகயிருக்கும் இந்தக் கோவில் சவாலை வெல்லும் சாதனையாளர்களை அடையாளம் காட்டிக்கொண்டேதானிருக்கிறது.
பல நூறண்டுகளாக மொட்டையாக நின்ற கோபுர அடிப்பகுதியின்மேல் தனது 85வது வயதில் பல போரட்டங்களுக்கிடையே 13 தளங்களுடன் ராஜகோபுரமாக எழுப்பிய சாதனையைச் சில ஆண்டுகளுக்கு முன் நமக்குக் காட்டியவர் ஜீயர் ஶ்ரீமத் அழகிய சிங்கர்.
ஆணையரிடமிருந்து அழைப்பு வருகிறது. “எப்படி இதைச்சாதித்தீர்கள்? என்ற நம் கேள்விக்கு “எல்லாம் அரங்கனின் ஆசி” என்ற அவரின் ஒற்றை வரி பதிலில் திருப்தியடையாமல் நாம் எழுப்பிய பல கேள்விகளுக்கு மிகப்பொறுமையாகப் பதில் சொன்னார். திரு ஜெயராமன். “இந்தக் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் திரு வேணு சீனிவாசன்*20. அவர் பொறுப்பேற்றபின் தான் இந்தப் பணிகள் தொடங்கபட்டன. முதலில் கோவிலைச் சுத்தம் செய்து சீராக்குவது தான் திட்டம். ஆனால் சில மண்டபங்களில் ஆகமவிதிகளின் படி தூண்களின் உயரத்துக்கும் விதானத்துக்கு ஏற்பத்தரைத்தளங்கள் இல்லையென உணர்ந்தபோதுதான் கிழ்பாகங்கள் புதையுண்டு போயிருக்குமோ? எனச் சந்தேகம் எழுந்தது. தொல்பொருள் ஆய்வாளார்களின் உதவியோடு பணியைத்துவக்கினோம். பல இடங்களில் 10 அடிக்கும் மேல் மண்மேடிட்டிருப்பது தெரிந்தது. அதை அப்புறப்படுத்தவது என்பது சவால். எங்கே என்ன இருக்கிறது என்றே தெரியாத நிலையில் சிற்பங்கள் பாழாகிவிடாமல் அதைச் கவனமாகச் செய்ய வேண்டியிருந்தது. அகற்றபட்ட மண் 60 டன்களுக்கும் மேல். கோவிலின் பூஜைபணிகள் பாதிக்கமல் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் சிறிய லாரிகளில் இரவு நேரங்களில் அகற்றினோம். சில பிரச்சனைகளும் எழுந்தன” என்கிறார்**19.

இந்தக்கோவிலின் நிர்வாகம் ஒரு வினோதமான கட்டமைப்பில் இருக்கிறது. அறநிலைத்துறை வசம் கோவில் இருந்தாலும் ஆகம விஷயங்கள் பல பரம்பரையாகத் தொடரும் குடுமபத்தினரிடமே இருக்கிறது. ஸ்தலத்தார் என்றழைக்கப்படும் அவர்கள் “காலங்காலமாக இருப்பதை எல்லாம் ஏன் மாற்றுகிறீர்கள்?” என இந்த மாறுதல்களை எதிர்த்திருக்கிறார்கள். வழக்குகள் போட்டிருக்கிறார்கள். “அசைக்கவே முடியாமல் துருப்பிடித்த கீல்களுடன் இருந்த கதவுகளை மாற்றியபோது பாரம்பரிய கதவுகளை விற்றுவிட்டோம் எனப் புகார் செய்தார்கள். அவர்களில் பலர் இன்றைய நிலையைப் பார்த்தபின் பாராட்டுகிறார்கள். இன்னும் சில தீவிர பழமை வாதிகள் தொடர்கிறார்கள் வழக்குகளும் இருக்கின்றன. அவற்றை அரங்கன் பார்த்துக்கொள்வான்” என்கிறார்

இந்தப் பிராஜக்கெட்டை செய்தது தொழிலதிபர்*20 திரு வேணு சீனுவாசனின் நிறுவனங்கள். அதன் அதிகாரிகளும்.பொறியிலாளர்களும் இரவு பகலாகப் பணிசெய்தார்கள். பலகட்டங்களில் அவரே பார்வையிட்டார். பல கோடிகள் செலவான இந்தத் திட்டத்தில் பெரும்பகுதி அவருடைய நன்கொடை என்கிறார்.திரு ஜெயராமன். தென்மாவட்டத்தைச்சேர்ந்த இவர் சட்டம்படித்தபின் தமிழக அரசுப்பணியில் தணிக்கைத்துறையில் சேர்ந்தவர். தான் அறநிலைததுறைக்கு மாறியபோது ஒரு கோவிலில் இத்தனை விஷயங்கள் இருப்பது தனக்கு தெரியாது என்கிறார். “செய்யும் தொழிலே தெய்வம்” என்கிறார் பட்டுக்கோட்டையார். இவர் தெய்வங்களைக் காக்கும் தொழிலைத் திறனுடனும் செய்நேர்த்தியுடனும் செய்கிறார்.
இந்த மனிதர் அறநிலைத்துறையில் மாநில அளவில் உயர் பதவிபெற்றால் தமிழக கோவில்களுக்கும் பக்தர்களுக்கும் நல்லது என்ற எண்ணம் எழுகிறது
.
ஓளி மங்கிய மாலை இரவாக மலர்கிறது. விடைபெற்றுக் கிளம்புகிறோம். ‘ஒரு மனிதன் செய்யும் பெரிய சாதனைகளுக்குக் காரணமாக இருப்பது அவனுக்குள் இருக்கும் தெய்வ சக்திதான்’ என்கிறது உபநிஷத்.
அத்தகைய மனிதர்களான திரு வேணு சீனிவாசன், ஜெயராமன் போன்றவர்களை இந்தக்கோவில் பெற்றிருப்பது அரங்கனின் திருவுள்ளம்.

கல்கி திபாவளி மலரில்(2017) எழுதியது

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்